Published : 04 May 2022 06:01 AM
Last Updated : 04 May 2022 06:01 AM

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா தாமதம் - சான்றிதழ் பெற முடியாமல் அவதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடத்துவதில் கால தாமதம் ஆகிவருவதால், பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டச் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில், கரோனா பெருந்தொற்று காரணமாக, ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்பின், இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும், நேரடி முறையில் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன.

வேலை வாய்ப்புக்கு...

பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் பட்டச்சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தில், கடந்த கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. தொடர்ந்து காலதாமதம் ஆகிவருவதால், பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்திய பின்னர்தான் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படும். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவே இன்னும் நடத்தப்படாததால் இணைப்பு கல்லூரி மாணவர்களாலும், பட்டச் சான்றிதழ் பெற முடியவில்லை.

எனவே, இனியும் தாமதமாகாமல் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்தி மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் உடனடியாக கிடைக்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும் என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x