மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள்.
நெல்லை மாநகராட்சி அறிவுசார் மையத்தில் இலவசமாக பயின்ற 18 பேர் அரசு பணி வாய்ப்பு பெற்றனர்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் செயல்படும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயின்ற 18 இளைஞர்கள் அரசுத் துறைகளிலும், வங்கிகளிலும் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். இம்மையம் தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் இந்த முன்னேற்றம் காணப் பட்டுள்ளது.
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் மாநகராட்சி அலுவலகம் எதிரே வ.உ.சி. மணி மண்டபத்தையொட்டி மாநகராட்சி சார்பில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது.
2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ரயில்வே, வங்கி உள்ளிட்ட பல்வேறு தேர்வு களுக்கு இலவசமாக பயில இருக்கைகள், மேஜைகள், கணினி வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இன்வெர்டர், கண்காணிப்பு கேமரா போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், தமிழ்நாட்டு கல்வி பாடப்புத்தகங்களை வாங்குவதற்கான தனியாக ஓர் அரங்கம் சமீபத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
தினமும் 150 பேர் வரையில் இந்த மையத்தை பயன்படுத்து கிறார்கள். இந்த மையத்தில் படித்தவர்களில் 2024, 2025-ம் ஆண்டுகளில் 18 இளைஞர்கள் பல்வேறு அரசு, வங்கி பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இம்மையத்தின் நூலகர் கார்த்திகா கூறும்போது, “இம்மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. ஞாயிறன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
அனைத்து விடுமுறை நாட்களிலும் இம்மையம் செயல்படுவதால் ஏராளமான மாணவ, மாணவியர் இங்குவந்து பயில்கிறார்கள். இங்குள்ள தமிழ், ஆங்கில கதைப்புத்தகங்களை படிக்க மாலை நேரங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள்.
ஆணையர் மோனிகா ராணா
போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் நாளிதழ்களும், புத்தகங்களும் இங்குள்ளன. இம்மையத்தில் பயின்ற 8 பேர் கடந்த 2024-ம் ஆண்டிலும், 10 பேர் கடந்த 2025-ம் ஆண்டிலும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
“இம்மையத்தில் இலவச வைபை வசதி உள்ளதால் ஆன்லைன் தேர்வுகளையும், தேவையான புத்தகங்களையும், தகவல்களையும் பதிவிறக்கம் செய்து படிக்க முடிகிறது” என்று கடந்த 6 மாதங்களாக இங்கு வந்து ரயில்வே தேர்வுக்கு தயாராகிவரும் புரத்தை சேர்ந்த டி.சுதர்சன் தெரிவித்தார்.
“ஆண்கள், பெண் களுக்கென்று தனித்தனியாக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கூடுதல் இருக்கைகள், மேஜைகள் அமைக்க வேண்டும்” என்று, இங்கு பயிலும் பல்வேறு மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணாவிடம் கேட்டபோது, கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவும், போட்டித் தேர்வுகளுக்கான தற்போதைய புதிய வெளியீடுகளையும், புத்தகங்களையும் வாங்கி வைக்கவும், மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்கும்” என்று உறுதி அளித்தார்.
