Last Updated : 05 Feb, 2019 10:56 AM

 

Published : 05 Feb 2019 10:56 AM
Last Updated : 05 Feb 2019 10:56 AM

கரும்பலகைக்கு அப்பால்... 13 - சொன்னதைச் செய்வோமா?

பத்தாம் வகுப்பு. பொதுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் வேளை. அவ்வப்போது வகுப்பில் நடத்தப்படும் தேர்வுகளின் விடைத்தாளைத் திருத்தி விநியோகித்துக் கொண்டிருந்தேன். விடைத்தாளை வாங்கியவுடன் தனது மதிப்பெண்ணைப் பார்த்தல், அருகிலிருக்கும் அல்லது தனக்குப் போட்டியாகக் கருதுபவர்களின் மதிப்பெண்ணை அறிதல், ஒப்பிடல் போன்ற செயல்கள் நடைபெற்றன.

இவற்றுக்கு மத்தியில் தன்னுடைய விடைத்தாளை வாங்கி வைத்துவிட்டு மற்றவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு இயல்பாக இருப்பார்கள் சிலர். அவர்களின் மதிப்பெண் மிகவும் குறைவாக இருக்கும். மற்றவர்களைக் கேலி செய்தபடி கலகலப்பாக இருப்பார்கள்.

வழக்கம்போல அவனைத் தனியே அழைத்துப் பேசினேன். “தம்பி, கட்டுரை, கடிதம், துணைப்பாடம் போன்றதை எல்லாம் யோசிச்சு எதையாவது எழுதுன்னு எத்தனை தடவை சொல்றது, எதுவுமே எழுதலேன்னா எப்படிப் பாசாகுறது?” என்றேன்.

சிரித்தபடியே சொன்னான் “ஐயா, அதெல்லாம் பப்ளிக்ல பாசாயிருவேன்!”.

மனதுக்குள் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “இதே பதிலையே எப்போதும் சொல்ற. எதுவுமே எழுதுறதும் இல்லை. எப்போ படிச்சு, எப்படி எழுதுவ?” என்றேன். “இதெல்லாம் சாதாரணம். அதெல்லாம் பப்ளிக்குல பாருங்க. செமையா மார்க் எடுத்திருவேன்” என்றான் மறுபடியும்.

எப்படி இந்தத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது? ஆண்டு தோறும் இப்படியான சிலரைப் பார்க்கிறேன். பேச்சில் மட்டுமே இருக்கும் நம்பிக்கையை ரசித்தாலும் மனத்தில் வேதனை நிரம்புகிறது.

எதற்கெடுத்தாலும் சவடால்!

கவிஞர் கந்தர்வனின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘சவடால்’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். பேருந்தில் பயணிக்கும் தொழிலாளி ஒருவர் மற்றவர்களிடம் சவடா லாகப் பேசிக்கொண்டே இருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மாணவர்கள் கலகலப்பாக ரசித்துக்கொண்டி ருந்தார்கள்.

படத்தின் இறுதிக் காட்சிகள் அதே மனிதரின் வேறு முகத்தையும் காட்டுகின்றன என்பதால், அவர் பேருந்தை விட்டு இறங்கி நடந்து செல்லும் காட்சியோடு படத்தை நிறுத்திவிட்டு உரையாடலைத் தொடக்கினேன்.

‘தாத்தா ரெம்பச் சிக்கனமா இருக்காரு.’

‘நாட்டுல இப்போ என்ன நடக்குதுன்னு தெரியுது.’

‘பொது இடத்துல இப்படில்லாம் நடந்துக்க கூடாது. மத்தவங்க மனசைக் கஷ்டப்படுத்தக் கூடாது.’

‘சிலர் கொஞ்சம் ஏமாத்துறாங்க. நேர்மையாவும் பேசுறாங்க.’

- போன்ற கருத்துகளைப் பகிர்ந்தபின் மீதிப் படத்தையும் பார்த்தோம். படத்தின் முடிவில்தான் தலைப்பு வருகிறது. ‘சவடால்’.

“சவடால்னா என்ன?” என்று உரையாடலை மீண்டும் தொடங்கினேன்.

“திமிரா பேசுறது, ஸ்டைல், தெனாவட்டு, எகத்தாளம் பேசுறது” என்று பல்வேறு அர்த்தங்களைச் சொன்னார்கள்.

“மகளுக்காகத்தான் இவ்வளவு சிக்கனமாக இருந்திருக்காரு.”

“வெளியே போகும்போது சாப்டுட்டு போகணும்.”

“தனக்குத் தப்புன்னு தெரிந்ததை மற்றவர்களுக்கும் சொல்றாரு.”

“அவரால வாங்க முடியல. மத்தவங்களைக் குறை சொல்றாரு.”

“தம்பிகளா, நம்மோட இயலாமையை மறைக்கத்தான் சவடால் பேசுறோம். அதுவே பழக்கமாகிப் பேச்சில மட்டும் நம்பிக்கையை வச்சுக்கிட்டு எதுவும் செய்யாமல் இருந்துவிடுகிறோம்னு எனக்குத் தோணுச்சு” என்று எனது எண்ணத்தையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டேன்.

மனிதர்கள் கலவையான குணங்களை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், பேச்சில் எப்போதும் நேர்மை மட்டுமே தொனிக்கிறது. பாடங்களும் வகுப்பறைகளும் வீடும் அப்படித்தானே! எங்கும் நீதியும் நேர்மையும் நியாயமும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அவற்றைச் செயலில் பழகும் வழிமுறைகள்தானே கல்வியாக இருக்க முடியும்!

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x