

புதுச்சேரி: கனமழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.
ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விட்டு விட்டு மழை பொழிந்ததால் புதுச்சேரியில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. காரைக்காலில் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதல் புதுச்சேரி காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடாமல் தொடர்ந்து இன்று காலையும் மழை நீடித்தது.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், ”கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று (நவ.18-ம்) செவ்வாய்க்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
இதனிடையே, கனமழை எதிரொலியாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்புகளும், இன்றைய தினம் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று பல்கலைக்கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.