

சென்னை: பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் (2025-26) பிப்ரவரி பருவச் சேர்க்கைக்கான இணையவழி, தொலைத்தூரப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைத்தூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்.
தகுதியான உயர்கல்வி நிறுவனங்கள் deb.ugc.ac.in/ எனும் வலைத்தளம் வழியாக நவ.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலை ஆவணங்களுடன் நவ.20-ம் தேதிக்குள் யுஜிசி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்பின் விண்ணப்ப படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுசார்ந்த விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.