

பிஎட், எம்எட் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் (தன்னாட்சி கல்லூரிகள் நீங்கலாக) முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
பிஎட், பிஎட் (சிறப்பு கல்வி), எம்எட் மற்றும் எம்எட் (சிறப்பு கல்வி) படித்து முதல் செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலித்து ஆன்லைனில் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்களிடம் மார்ச் 18 வரை அபராத கட்டணத்துடன் தேர்வுக் கட்டணத்தை வசூலித்து செலுத்த வேண்டும். பிஎட், பிஎட் (சிறப்பு கல்வி) தேர்வுக் கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.200. எம்எட் மற்றும் எம்எட் (சிறப்பு கல்வி) படிப்புக்கு தாள் ஒன்றுக்கு ரூ.300. இரண்டுக்கும் மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் தலா ரூ.100 அபராத கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.