

சென்னை: குஜராத் காந்திநகர் ஐஐடியில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க வேண்டுமென கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் , காந்திநகர் ஐஐடி.யுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான தேசிய ஹேக்கத்தான் போட்டியை மார்ச் 21 முதல் 23-ம் தேதி வரை நடத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தரவு கட்டமைப்பு உதவியுடன் சமூக, பொருளாதார சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது.
இதில் ஏஐ, இயந்திரக்கற்றல் தொழில்நுட்பம், தரவு மேலாண்மை, ஆவணங்கள் உட்பட முக்கிய அம்சங்கள் கருப்பொருள்களாக இடம்பெறும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://iieciitgn.com/hackthefuture/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து, ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று சவால்களுக்கு புதிய தீர்வுகளை கண்டறிய பங்களிப்பை வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.