Published : 14 Feb 2025 05:30 AM
Last Updated : 14 Feb 2025 05:30 AM

மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக கல்லூரி மாணவிகள் 1000 பேருக்கு மஞ்சப்பை

சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், டெமினாஸ் இந்தியா நிறுவன துணைத் தலைவர் (சிஎஸ்ஆர்) கிடியன் கிறிஸ்துதாஸ், உத்கர்ஷ் குளோபல் பவுண்டேசன் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.வசந்தராஜ், கல்லூரி பேராசிரியை கே.சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை: பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 1000 பேருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று மஞ்சப்பை வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் குப்பையை வகைபிரித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இம்முகாமில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து, வீடுகளில் உருவாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பை என்று வகை பிரித்து அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அது தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. பின்னர் மாணவிகள் அனைவருக்கும் டெமினாஸ் இந்தியா நிறுவனம் உதவியுடன் 1000 மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், டெமினாஸ் இந்தியா நிறுவன துணைத் தலைவர் (சிஎஸ்ஆர்) கிடியன் கிறிஸ்துதாஸ், உத்கர்ஷ் குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.வசந்தராஜ், கல்லூரி பேராசிரியை கே.சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x