

ஆன்லைனில் எம்.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் எம்.டெக். செயற்கை நுண்ணறிவு படிப்பை சென்னை ஐஐடி புதிதாக அறிமுகம் செய்துள்ளது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் தங்களது ஏஐ தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி, திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்புவோர் https://code.iitm.ac.in/webmtech என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, அதற்கான பாடத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31-ம் தேதி. எம்.டெக். படிப்புக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.