Last Updated : 06 Feb, 2025 02:18 PM

 

Published : 06 Feb 2025 02:18 PM
Last Updated : 06 Feb 2025 02:18 PM

புதுச்சேரி மத்திய பல்கலை. தேர்வு - தவறான கேள்வித்தாள் காரணமாக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி: தவறான கேள்வித்தாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வு பிரிவு அனுப்பியதால் தேர்வுக்கூடத்திலேயே மாணவ, மாணவிகள் காத்திருந்தனர். பிறகு முதலாண்டு தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு மொழிப்பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புக் கல்லூரிகளாக உள்ள அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று (பிப்.6) மொழிப்பாடம் தேர்வு நடக்க இருந்தது. இதற்காக, தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு ஆகிய பாடங்களுக்கு தேர்வு எழுத புதுச்சேரி முழுவதிலும் இருந்து முதலாண்டு படிக்கும் 7500 மாணவ, மாணவிகள் வந்தனர்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து தேர்வுத்தாள்கள் வந்தன. தேர்வுகள் தொடங்கியவுடன் தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு மொழி பாடத்துக்கு விண்ணப்பித்தோருக்கு அவர்களுக்கு கேள்வித்தாள்களை கல்லூரிகளில் விநியோகித்தனர். கேள்வித்தாள்களை பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். முதலாம் ஆண்டு கேள்வித்தாள் இல்லை என தேர்வுக்கூடத்தில் கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.

அதையடுத்து அவர்கள் கல்லூரி முதல்வர்களிடம் குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து பல கல்லூரிகளில் இருந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்த்துக்கு புகார்கள் வந்தன. தேர்வு எழுதாமல் மாணவ, மாணவிகள் ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்தனர். அதைத்தொடர்ந்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகட்டுப்பாட்டு பிரிவானது இத்தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்து அனைத்து கல்லூரிகளுக்கும் மெயில் அனுப்பியது. தேர்வு தேதி பின்னர் அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதாமல் புறப்பட்டனர்.

இதுபற்றி புதுவை அரசு சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் டாக்டர் ராம்குமார் கூறுகையில், “புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வு பிரிவில் இருந்து கேள்வித்தாள் தவறாக அனுப்பியதால் இன்று மொழிப்பாடம் தேர்வு எழுத முடியாமல் 7500 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு தேர்வு எழுதாமல் சென்றுள்ளனர். அத்துடன் தேர்வு கூடத்திலேயே ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்தனர்.

"இது முதல்முறை நடக்கவில்லை. ஏற்கெனவே செமஸ்டர் தேர்வில் 3 முறை நடந்துள்ளது. அதில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வில் இதுபோல் தவறான கேள்வித்தாள் வந்ததால் மெயிலில் சரியான கேள்வித்தாள் வந்து அதை பிரதி எடுத்து தந்து தேர்வு நடத்திவிட்டோம். இம்முறை மொழிபாடம் என்பதால் அனைத்து கல்லூரி பிரிவுகளையும் சேர்ந்தோர் எழுத வேண்டி இருந்ததால் அதுபோல் செய்ய முடியவில்லை. தேர்வுப்பிரிவு சரியாக செயல்படாதது தொடர்கிறது. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிப்படுவது தொடர்கிறது. எனவே, அரசு இதில் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்,” என தேர்வுக்கூட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x