

சென்னை: தமிழகத்தில் நூறாண்டு கடந்த 2,238 அரசுப் பள்ளிகளில் விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 2,238 அரசுப் பள்ளிகள் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளன. இந்த பள்ளிகளில் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழா முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த தஞ்சாவூர் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து இன்று தொடங்கப்பட உள்ளது.
இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 37 அரசுப் பள்ளிகளிலும் நூற்றாண்டு திருவிழா நாளை (ஜனவரி 23) முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதன்பின் 100 ஆண்டுகளைக் கடந்த இதர பள்ளிகளிலும் நூற்றாண்டு நிகழ்வை ஆண்டு விழாவுடன் சேர்த்து கொண்டாட வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி விழாக் குழு வாயிலாக முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியைச் சார்ந்த அனைவருக்கும் நூற்றாண்டு விழா குறித்து தெரியப்படுத்த வேண்டும். தற்போது பணிபுரியும் மற்றும் முன்னாள் ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த திட்டமிட வேண்டும். விழாவை புகைப்படம், வீடியோ வாயிலாக பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதைப் பின்பற்றி பள்ளி நூற்றாண்டு திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.