

அரசு பள்ளிகளில் படிக்கும் வடமாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வடமாநிலத்தினர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ந்து தமிழ்மொழியை படிக்க வைப்பதாகவும், அம்மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் வடமாநிலத்தினரின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் வழங்கி உற்சாகப்படுத்துமாறும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.