தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.6.23 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ரூ.6.23 கோடி ஒதுக்கீடு

Published on

சென்னை: ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள அரசு மாணவர்களின் உயர் கல்வி செலவினங்களுக்காக ரூ.6.23 கோடி ஒதுக்கீடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் எஸ்.மதுமதி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: “அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் உள்ள தலைசிறந்த நிறுவனங்களில் (ஐஐடி, என்ஐடி போன்றவை) சேரும் அனைத்து மாணவர்களின் கல்விசெலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்றுச்சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் அக்கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான செல்லும் முதல் பயணத்தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கு ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அமைச்சரின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், நிப்ட், தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 2022-ம் ஆண்டு சேர்ந்த 18 மாணவர்கள் 2023-ம் ஆண்டில் சேர்ந்த 74 மாணவர்கள், 2024-ம் ஆண்டு சேர்ந்த 333 மாணவர்கள் என மொத்தம் 425 பேருக்கு கல்விச்செலவினமாக ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டார். அதை ஏற்று ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கி அரசு ஆணையிடுகிறது என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in