கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு 16 முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல்

கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு 16 முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தகவல்

Published on

சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட்படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ம்தேதி தொடங்குவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாநில அளவிலான பாரதி இளம்கவிஞர் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும்நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற பழநி பழனியாண்டவர் கல்லூரி மாணவர் முகமது அன்சாரிக்கும் மாணவிகள் பிரிவில் முதலிடத்தை பிடித்த சேலம் புனித சூசையப்பர் கல்லூரி மாணவி நிவேதாவுக்கும் அமைச்சர் தலா ரூ.1 லட்சமும், சான்றிதழும் வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில் பிஎட்மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு 16-ல்தொடங்கி 26-ம் தேதி நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து 30-ம்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்.14 முதல் 19 வரை கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்பு 23-ம் தேதி தொடங்கும். பிஎட் படிப்பில் அரசு கல்லூரிகளில் 900 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,040 இடங்கள் எனமொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.

தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதி அதிகம் உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு பிஎம்  நிதி கூட தரவில்லை. புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல திட்டங்களை நாங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டோம். ஆனால் சில திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட முடியாதவை. குறிப்பாக 3, 5, 8-ம்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த சொல்கிறார்கள். அதை எப்படி ஏற்க முடியும். அந்தக் காலத்தில் இஎஸ்எல்சி இருந்தது. அதனால்தான் பலர் 8-ம் வகுப்பை தாண்டவில்லை. அதை மாற்றிதான் எஸ்எஸ்எல்சி முறை கொண்டுவரப்பட்டது. அவர்கள் சொல்வதுபோல் செய்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் வாய்ப்பு இதுபோன்ற சூழல்களால் மறுக்கப்படும்.

தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்து இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையில் உள்ளமதிய உணவு திட்டம் தமிழகத்தில்காமராஜர் காலத்தில் இருந்தேசெயல்படுத்தப்பட்டு வருகிறது. பி.ஏ., பிஎஸ்சி. சேரக் கூட நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. பொறியியல் படிப்பில் சேர முன்பு நுழைவுத் தேர்வு இருந்தது அதை நீக்கியவர் கருணாநிதி.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் இருந்தால் போதும். ஆங்கிலம் சர்வதேச மொழி. அது அனைவரும் படிக்க வேண்டியது கட்டாயம். மாணவர்கள் விருப்ப பாடமாக எதை வேண்டுமானாலும் படிக்கட்டும். ஆனால் கட்டாயம் இதைத்தான் படித்தாக வேண்டும் என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைனில் விண்ணப்பம்: பிஎட் படிப்பில் சேர விரும்பும் பட்டதாரிகள் www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலஅட்டவணையை மேற்குறிப்பிட்ட இணையத்தில் அறிந்துகொள்ளலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in