தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்: மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவுரை

தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்: மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் அறிவுரை கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் வேல்ராஜின் 3ஆண்டு பதவிக்காலம் இன்றுடன்(ஆகஸ்ட் 10) முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று அவர் பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. படிப்பு செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று பொறியியல் கல்லூரிகளில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைக் குறிவைத்து சில தனியார் கல்லூரிகள் மூளைச்சலவை செய்துமாணவர் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

தொலைபேசி வாயிலாக வரும்அழைப்புகளை நம்பி மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யவேண்டாம். தரமற்ற கல்லூரிகளில்இருந்துதான் அழைப்பு வரும்என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கலந்தாய்வின்போது கல்லூரி விருப்ப வாய்ப்புகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியரின் விவரங்களை தவறாகப் பயன்படுத்திய தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில் 90 சதவீத கல்லூரிகள் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளன. 10 சதவீத கல்லூரிகள் மட்டுமே முறையான விளக்கத்தை வழங்கியுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, பொறியியல் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பிடித்தமான கல்லூரி மற்றும்பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கு 12-ம் தேதிவரை அவகாசம் அளிக்கப்படும். 13-ம் தேதி அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும்.

அதை அவர்கள் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து 15-ம்தேதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in