கல்வி உதவித் தொகைக்கான திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று (புதன்கிழமை) அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் 2023-ம் ஆண்டு முதல் முதல்வரின் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என்றபடி இளநிலை பட்டப்படிப்பு வரை தரப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் 9, 10-ம் வகுப்பு கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் இரு தாள்களாக தேர்வு நடைபெறும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் கேட்கப்படும். மேலும், முதல்தாளில் கணிதமும், 2-ம் தாளில் அறிவியல், சமூக அறிவியல் வினாக்களும் இடம்பெறும்.

இந்த தேர்வின் முதல் தாள் காலை 10 முதல் மதியம் 12 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2 முதல் மாலை 4 மணி வரையும் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 11-ம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 3-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தேர்வுத் துறை வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.

இந்தத் தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in