தமிழக அரசுப் பள்ளிகளில் சுவர் ஓவியங்கள் வரையும் பணி: விரைந்து முடிக்க உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 6,130 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்களைக் கவரும் வகையில் சுவர் ஓவியங்கள் வரையும் பணியை விரைந்து முடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தில் 2023-24-ம் ஆண்டில் முதற்கட்டமாக 6,130 பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் அமைப்பதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநருக்கு நிதி விடுவித்து பணிகளைத் தொடங்கிட கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பள்ளிகளில் திறன் பலகை பொருத்தப்படும். வகுப்பறைகளில் மாணவர்களை கவரும் வகையில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் (பாலா பெயிண்டிங்) இடம்பெற்றிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘டிஎன்எஸ்இடி செயலி வழியாக பள்ளிகளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்து அதனை உள்ளீடு செய்ய வேண்டும். வரையும் பணி முழுமையாக நிறைவு பெற்றிருந்தாலோ, நடைபெற்றுக் கொண்டிருந்தாலோ, தொடங்கப்படவில்லை என்றாலோ அது குறித்து தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். இது தொடர்பாக 6,130 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழங்கி இந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து விரைந்து முடிக்க வேண்டும்’ எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in