10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுஇன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. பின்னர், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகளும் முடிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளிமாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறியலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் (என்ஐசி) மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in