Published : 07 May 2024 05:30 AM
Last Updated : 07 May 2024 05:30 AM

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வில் 87 சதவீதம் பேர் தேர்ச்சி

பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் பூங்கோதை, ஹரிணி பிரியா மற்றும் திவ்யாஸ்ரீ ஆகியோர் பிளஸ்-2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி அளவில் முதல் மற்றும் 3-ம் இடங்களைப் பிடித்துள்ளனர். மாணவிகளுக்கு இனிப்பு ஊட்டிய பள்ளி தலைமை ஆசிரியை. | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வில் 87 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 20ஆயிரம் பேர் பயின்று வருகின்றனர்.

2023-24 கல்வியாண்டில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 2,140 மாணவர்கள், 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 பேர் எழுதினார்கள். இதில் 1,750 மாணவர்கள் (81.7 சதவீதம்), 2,605 மாணவிகள் (91.15 சதவீதம்) என மொத்தம் 4,355 பேர் (87.13 சதவீதம்)தேர்ச்சிபெற்றுள்ளனர். இது கடந்த கல்வி ஆண்டை விட 0.27 சதவீதம் அதிகம்.

பாடவாரியாக வணிகவியல் பாடத்தில் 16 பேர், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 14 பேர், பொருளாதாரம் 12 பேர், கணினி அறிவியல் 9 பேர், கணக்கியல் 2 பேர், புவியியல், விலங்கியல், கணிதப் பாடங்களில் தலா ஒருவர் என 56 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் பெரம்பூர் எம்.எச்.சாலை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் 600-க்கு 578 மதிப்பெண்கள், கொளத்தூர் மேல்நிலைப் பள்ளி மற்றும் புத்தா தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தலா 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x