Published : 07 May 2024 04:00 AM
Last Updated : 07 May 2024 04:00 AM

சிஐஎஸ்சிஇ முடிவுகள்: 10-ம் வகுப்பில் 99%, பிளஸ் 2-வில் 98% பேர் தேர்ச்சி

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சிஐஎஸ்சிஇ பாடத் திட்ட பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 10-ம் வகுப்பில் 99.47 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 98.19 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் கவுன்சில் ( சிஐஎஸ்சிஇ ) பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு ( ஐசிஎஸ்இ ) மற்றும் 12-ம் வகுப்பு ( ஐஎஸ்சி ) பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த 2 தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 2 லட்சத்து 43,617 மாணவர்கள் எழுதினர். அதில் 2 லட்சத்து 42,328 மாணவர்கள் தேர்ச்சி ( 99.47% ) அடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 98.94 சதவீதமாக இருந்தது.அதேபோல, ஐஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வை 99,901 மாணவர்கள் எழுதினர். அதில் 98,088 பேர் தேர்ச்சி ( 98.19% ) பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிலாக்கர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு குறித்த விவரங்களை www.cisce.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x