24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்கும் ‘டெலிமனாஸ்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

24 மணி நேரமும் மனநல ஆலோசனை வழங்கும் ‘டெலிமனாஸ்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: 24 மணி நேரமும் மனநல ஆலோசனைகளை இலவசமாக வழங்கும் ‘டெலிமனாஸ்’ திட்டம் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுமம் (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

இலவச சேவை: உலக மனநல தினத்தை முன்னிட்டு கடந்த 2022, அக்.10-ல் அனைத்து மாநிலங்களிலும் டெலி தொழில்நுட்பம் அடிப்படையில் மனநல ஆலோசனைகளை வழங்ககூடிய ‘டெலிமனாஸ்’ திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. அதன்படி நாடு முழுவதும் இலவசமாக தொலைதொடர்பு (டெலி) மூலம் 24 மணி நேரமும் மக்களுக்கு மனநலம் தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ‘டெலிமனாஸ்’ திட்டத்தின் மூலம் ‘14416’ மற்றும் 1800-891-4416 என்ற இலவச உதவி எண்கள் கடைசி மைல் தூரம் வரை மக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே 24 மணி நேரமும் கிடைக்ககூடிய மனநல ஆலோசனைக்கான இலவச உதவி எண் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இலச்சினை வெளியீடு: இந்நிலையில் 2023-ம் ஆண்டு உலக மனநல தினத்தையொட்டி நடத்தப்பட்ட தேசிய சுகாதார மனநல மாநாட்டில் ‘டெலி மனாஸ்’ திட்டத்துக்கு புதிய இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.

மனநல ஆரோக்கியத்துக்காக 24 மணி நேரமும் வழங்கப்படும் ‘டெலிமனாஸ்’ திட்டத்தின் இலவச உதவி எண்ணுடன் கூடிய இந்த இலச்சினையை உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது வளாகங்களில் விளம்பரப்படுத்தி மாணவர்களிடம் ‘டெலிமனாஸை’ கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in