Published : 15 Mar 2024 04:04 AM
Last Updated : 15 Mar 2024 04:04 AM

அரசு பள்ளிகளில் ‘பிராட்பேண்ட்’ இணைப்புக்கு பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

பிரதிநிதித்துவப் படம்

சிவகங்கை: அரசு பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகம் ( ஹைடெக் லேப் ), ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு கொடுக்கப்படும் `பிராட்பேண்ட்' இணைப்புக்கு பணம் வசூலிக்கும் முடிவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் முழு வதும் 28,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பிஎஸ் என்எல் மூலம் 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட `பிராட் பேண்ட்' இணைய வசதி வழங்கப்பட உள்ளது.

இணைய சேவைக்கான மாதக் கட்டணம் அதிக பட்சம் ரூ.1,500 வரை பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல பள்ளிகள் நகரங்களில் இருந்து பல கி.மீ. தூரத்தில் கிராமங்களில் உள்ளன. இதையடுத்து குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் கேபிள் கொண்டு செல்ல கூடுதல் செலவாகும் என்பதால் பள்ளிகளில் பணம் கேட்கப் படுகின்றன. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் சகாயதைனேஸ் கூறியதாவது: பள்ளிகளின் தூரத்துக்கு ஏற்ப ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும் என பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், செலவாகும் தொகையை நன்கொடை பெற்றுத் தருமாறு தலைமை ஆசிரியர் களை கல்வித் துறை அதிகாரிகள் வற்புறுத்து கின்றனர். இதனால், தலைமை ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இணைய இணைப் புக்குத் தேவைப்படும் தொகையை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘பள்ளி வளர்ச்சி நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிதி திரட்டிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் செலவழிக்கத் தேவை யில்லை’’ என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x