அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துவிட்டதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, வழக்கத்தைவிட முன்னதாக இந்த ஆண்டு சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டன. மாணவர் சேர்க்கையை முன்வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பர பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். இதுவரை 1.04 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 குழந்தைகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்தபடியாக கிருஷ்ணகிரியில் 8,803 பேரும், சேலத்தில் 8,774 பேரும் சேர்ந்துள்ளனர்.

இதுதவிர, அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்க உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சம் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளும் துரிதப்படுத்தப் பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in