

சென்னை: டான்செட் மற்றும் சீட்டா நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ, எம்.டெக்,எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
அந்தவகையில் 2024-25-ம்கல்வியாண்டுக்கான ‘டான்செட்’நுழைவுத் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், ‘சீட்டா’ நுழைவுத் தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் (பிப்.7) நிறைவடைந்தது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் டான்செட், சீட்டாநுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.