Published : 30 Jan 2024 04:08 AM
Last Updated : 30 Jan 2024 04:08 AM

மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சமூகத்துக்கு தேவையானதாக இருக்க வேண்டும்: பள்ளி கல்வித் துறை துணை இயக்குநர் வலியுறுத்தல்

மதுரை: மாணவர்கள் சமூகத்துக்குத் தேவையான புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், என்று பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் எம்.சிவக்குமார் தெரிவித்தார்.

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி ( விஐடி ) வழங்கும் ‘இந்து தமிழ் திசை நாளைய விஞ்ஞானி 2023’ என்ற மாணவர் களுக்கான அறிவியல் நிகழ்ச்சி, மதுரை நத்தம் சாலையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி சேட்டிலைட் வளாகத்தில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9, 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் தயாரித்த அறிவியல் வழிமுறை ஆய்வுகளை சமர்ப்பிக்கும் மண்டல அளவிலான நிகழ்வாக நடந்தது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தியது. பல்வேறு தலைப்புகளில் 85-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ஆய்வுகளைச் சமர்ப்பித்தனர்.

இதில், முதுநிலைப் பிரிவில் மதுரை கரடிப்பட்டி அக்ஷரா மெட்ரிக் பள்ளி , மதுரை எஸ்பிஓஏ சீனியர் செகண்டரி பள்ளி, இளநிலைப் பிரிவில் காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளி, திண்டுக்கல் லிங்கவாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியன மாநில அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க தகுதி பெற்றன.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் எம்.சிவக்குமார் பேசியதாவது: சமூகத்துக்குத் தேவை யானவற்றை இந்து தமிழ் திசை நாளிதழ் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் வாசிப்பு திருவிழாவை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது `நாளைய விஞ்ஞானி' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நமது நாட்டில் கண்டுபிடிப்பு களுக்கு வறட்சி உள்ளது. எல்லாமே கண்டுபிடித்தாகிவிட்டது. இனி நாம் கண்டுபிடிப்பதற்கு ஒன்றுமில்லை என்று நானே சில நேரங்களில் நினைப்பது உண்டு. ஆனால், ஒவ்வொரு இடங்களிலும் மாணவர்கள் கண்டு பிடிப்புகளை உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவக்குமார்

ஒரே ஒரு படைப்பாவது சமூகத்துக்குத் தேவையான, அதே நேரத்தில் புதுமையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே தனியார் அமைப் புகள் மற்றும் அரசு நிறைய செலவு செய்கின்றன. ஏன் என்றால், எங்காவது இந்த உலகத்துக்குத் தேவையான கண்டுபிடிப்புகள் நமது பிள்ளைகளிடம் இருந்து வந்துவிடாதா? என நினைக்கி றார்கள். அதனாலே மாவட்ட, மாநில, தேசிய அளவில் தேர்வு செய்த கண்டுபிடிப்புகள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. அது, ஏன் நமது ஊர், நமது மாவட்டம், நமது மாநிலமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.

மாணவர்களுக்கு அறிவு புகட்டக்கூடிய ஏராளமான வலைதளங்கள், வாய்ப்புகள் இன்று கொட்டிக் கிடக்கின்றன. மொபைல் போன், இணையதள வசதியில்லாத குழந் தைகள் இன்று குக்கிராமத்தில்கூட இல்லை. மேலும், ஆசிரியர் சொல்லித்தான் மாணவர்கள் இன்று கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. சுயமாக கற்றுக் கொள்ள கூடிய நிலை உள்ளது. ஆனால், அதையும் தாண்டி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.

முன்பு நாளிதழ்களை வாசிக்க தவம் கிடக்க வேண்டும். ஆனால், தற்போது அரசே பள்ளிகளில் நாளிதழ்களை வாங்கிக் கொடுக்கிறது. நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் நடக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை. அப் போதுதான் அவர்களிடம் தேடல் அதிகரிக்கும். மாணவர்கள் மூளைக்குச் சரியாக வேலை கொடுக்காத பட்சத்தில் அவர்கள் மூளை எதைப் பார்க்கிறதோ அதை நோக்கித் திரும்பி விடுகிறார்கள்.

அது தவறானதாகக் கூட இருக் கலாம். பிற்காலத்தில் அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச் சென்று விடும். இதற்கு ஆசிரியர் களை மட்டுமே காரணமாகக் கூறிவிட முடியாது. பெற்றோரும் ஒரு காரணம் தான். வருங்காலத்தில் மாணவர்கள் சமூகத்துக்குத் தேவையான பங்களிப்புகள், கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நாம் மாணவர்களை திசை திருப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினகரன்

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.தினகரன் பேசுகையில், ‘‘2023-ம் ஆண்டில் அறிவியல் தொழில் நுட்பப் புதுமை கண்டுபிடிப்பு கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளிகளில் 14 வயதில் அதிகமாக அறிவியல் பாடப் பிரிவுகளில் விரும்பிச் சேர்கின் றனர். 18 வயதுக்கு மேல் கல்லூரிகளில் அறிவியல் படிப்பை தேர்வு செய்வோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதில் இயற்பியல், கணிதம் படிப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு.

பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. இவ்வளவு சிரமப்பட்டு படித்து விட்டு பிற்காலத்தில் வேலை கிடைக்காத பட்சத்தில் என்ன செய்வது என்ற குழப்பமான மனநிலையே முக்கியக் காரணம். பள்ளிப் பருவத்தில் அறிவியல் மனப் பான்மையையும், ஆர்வத்தையும் உருவாக்கினால், கல் லூரிகளில் அறிவியல் படிப்பு களில் மாணவர்கள் அதிகமாகச் சேர்வார்கள்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x