Published : 17 Nov 2023 04:56 AM
Last Updated : 17 Nov 2023 04:56 AM

மார்ச் 1-ல் பிளஸ் 2, மார்ச் 26-ல் பத்தாம் வகுப்பு தேர்வு தொடக்கம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று வெளியிட்டார்.

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதியும் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு காலஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2- பொதுத்தேர்வுகளை எதிர்நோக்கி லட்சக்கணக்கான மாணவர்கள் தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, பள்ளிக்கல்வித்துறை 4 மாதங்கள் முன்னதாகவே, தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்களும் பாடங்களை விரைவாக முடித்து, திருப்புதல் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த 2023-24-ம்கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவணையை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அப்போது தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அமைச்சர் வெளியிட்ட அட்டவணைப்படி, முதலில் பிளஸ்-2 பொதுத்தேர்வு 2024 மார்ச் 1-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி முடிகிறது. இந்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வரும் பிப். 12-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிகிறது. செய்முறைத் தேர்வுகள் பிப். 19-ல் தொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகிறது.

இதுதவிர, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி, ஏப். 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப். 23 தொடங்கி29-ம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்படுகிறது.

இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: ஏப்ரல் இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்றதகவல் வந்தது. அதற்கேற்ப தற்போது பொதுத்தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதிக்கு முன்னதாகவே தேர்தல்அறிவிக்கப்படும் பட்சத்தில், அப்போது அதற்கேற்ப முடிவெடுக்கப்படும். பொதுத் தேர்வை கருத்தில்கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

போதிய இடைவெளியுடன் தேர்வு: முதல்வர் உத்தரவின்படி, மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியேதயாராகும் வகையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களுக்கு நெருக்கடிஇல்லாமல், போதிய இடைவெளிவிட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு இருந்ததால் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகளில் வருகைப் பதிவில் ‘ஆப்சென்ட்’ கருத்தில் கொள்ளப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டில் வருகைப்பதிவு சரியாக இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாகவே தேர்வு: ஆண்டுதோறும், மார்ச் 2-வது வாரம் பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வுகளும், ஏப்ரல் முதல் வாரம் அல்லது 2- வது வாரம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடத்தப்படும். அதற்கேற்ப அட்டவணை தயாரிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வானது நடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டு அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 8ம் தேதிக்குள் முடிக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல், நீட் தேர்வு, ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளால் பொதுத் தேர்வுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x