மானாமதுரை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மானாமதுரை: மானாமதுரை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் மாணவிகள் படிப்பை பாதியில் கைவிடும் நிலை உள்ளது.

சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வேதியரேந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் வேதியரேந்தல், செங்கோட்டை, ஏனாதிகோட்டை, பள்ளமீட்டான், தெற்கு சந்தனூர், வடக்கு சந்தனூர் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி, பிற்பட்டோர் நல மாணவர் விடுதி என 2 விடுதிகள் உள்ளன.

பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு 10 கி.மீ., தொலைவில் உள்ள மானாமதுரைக்கு செல்ல வேண்டும். இதையடுத்து அப்பகுதி மக்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரிக்கை வைத்தனர். மேலும் கல்வித் துறை அதிகாரிகளின் பரிந்துரையின்படி 2015-ம் ஆண்டு ரூ.2 லட்சத்தை அரசுக்கு செலுத்தினர்.

ஆனால் 7 ஆண்டுகள் கடந்தும் பள்ளியை தரம் உயர்த்தவில்லை. இந்நிலையில் பெற்றோர் சிலர் தங்களது பெண் குழந்தைகளை மானா மதுரைக்கு அனுப்ப மறுக் கின்றனர். இதனால் அவர்கள் படிப்பை பாதியில் கைவிடும் நிலை உள்ளது.

இது குறித்து கல்விக் குழு ஆலோசகர் நாகராஜன் கூறுகையில், "இப்பள்ளி 2007-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்பள்ளிக்காக 10.5 ஏக்கர் நிலத்தை கொடுத்தோம். போதிய இடம் உள்ளது. பணமும் செலுத்திவிட்டோம். ஆனால் பள்ளியை தரம் உயர்த்த மறுத்து வருகின்றனர். இதனால் 10-ம் வகுப்பு முடிக்கும் மாணவிகள் சிலர், மேல்நிலைப் பள்ளியில் சேராமலேயே படிப்பை கைவிடுகின்றனர்.

பள்ளியை தரம் உயர்த்த அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறினார். இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in