இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் மாநிலக் கல்லூரிக்கு சிறப்பு அங்கீகாரம்

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் மாநிலக் கல்லூரிக்கு சிறப்பு அங்கீகாரம்
Updated on
1 min read

சென்னை: சிறந்த கல்விக் கட்டமைப்பு கொண்டுள்ளதற்காக மாநிலக் கல்லூரிக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தென்னிந்தியாவின் முதல் கல்லூரியாக சென்னை மாநிலக் கல்லூரி நிறுவப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி அருகே நூற்றாண்டைக் கடந்து இயங்கி வரும் மாநிலக் கல்லூரி பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியது. தற்போதும் தேசிய அளவிலான தரவரிசையில் முதன்மையான கல்வி நிறுவனமாக மாநிலக் கல்லூரி திகழ்கிறது.

மத்திய அரசின் 2023-ம் ஆண்டுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் (என்ஐஆர்எஃப்) சிறந்த கல்லூரி வரிசையில் 3-வது இடத்தை மாநிலக் கல்லூரி பிடித்துள்ளது. அதன்தொடர்ச்சியாக மாநிலக் கல்லூரிக்கு மற்றொரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) சார்பில் தரச்சான்று அளித்து கவுரவிக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் சிறந்த தரமான கல்வி கட்டமைப்பு கொண்டுள்ள சென்னை மாநிலக் கல்லூரி உட்பட 4 கல்லூரிகளுக்கு ‘கல்விக்கான மேலாண்மை திட்ட உரிமம்’ எனும் சிறப்பு அங்கீகாரம் பிஐஎஸ் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மாநிலம் முழுவதும் அரசு, தனியார் என 300-க்கும்மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பித்த நிலையில் 4 கல்லூரிகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் மாநிலக் கல்லூரி மட்டுமே அரசுக் கல்லூரியாகும். இந்த அங்கீகாரம் பெரும் சாதனையாகும். அனைவரின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த பரிசாக இதைக் கருதுவதாக கல்லூரி முதல்வர் ஆர்.ராமன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆவினுக்கும் அங்கீகாரம்: இதே போல, ஆவின் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்), ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி (சென்னை), ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (சென்னை), எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (காட்டாங்கொளத்தூர்) ஆகிய நிறுவனங்களுக்கும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in