சிபிஎஸ்இ விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிபிஎஸ்இ விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் விளையாட்டுப் போட்டியில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை கோவில் பாப்பாகுடியைச் சேர்ந்த சந்திரா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மகள் நித்யமீனாட்சி, மதுரை ரயில்வே சிபிஎஸ்இ பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கிறார். கைப்பந்துப் போட்டியில் பங்கேற்று வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் இடையே தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகளை சிபிஎஸ்இ விளையாட்டு வாரியம் நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே அக். 1-ல் தொடங்கும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் பினேகாஸ் ஆஜராகி, அரசுப் பள்ளி மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுப்பது சட்டவிரோதம், என்றார். இதையடுத்து, சிபிஎஸ்இ விளையாட்டுப் போட்டிகளில் அரசு சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in