Published : 20 Sep 2023 06:00 AM
Last Updated : 20 Sep 2023 06:00 AM

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வு இன்று தொடக்கம்

சென்னை: 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு இன்று (செப்.20) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன்வெளியிட்ட சுற்றறிக்கை: 1 முதல் 5-ம் வகுப்புக்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு இன்று (செப்.20) தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதில் 1 முதல் 3-ம்வகுப்பு குழந்தைகளுக்கு செல்போன் செயலி மூலமும், 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து வடிவிலும் தேர்வு நடைபெறும்.

அதன்படி 1, 2, 3-ம் வகுப்பினருக்கு செயலியில் ஒரு பாடத்துக்கு தலா 5 வினாக்கள் மட்டுமே கேட்கப்படும். மேலும்,4, 5-ம் வகுப்புக்கான வினாத்தாள் செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதை பிரதி எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்.

இதுதவிர 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வரும் காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வளரறி மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். இதற்கிடையே முதல் பருவத் தேர்வு நடைபெறுவதால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும்பயிற்சி தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி 1 முதல் 3-ம் வகுப்புவரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அக்.4 முதல் 6-ம் தேதிவரையும், 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அக்.9 முதல்11-ம் தேதி வரையும் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும். இந்த தகவலை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x