Published : 02 Aug 2023 04:52 PM
Last Updated : 02 Aug 2023 04:52 PM

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் கட்டி முடித்து ஓராண்டாகியும் செயல்படாத மாணவிகள் விடுதி!

கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கட்டி முடித்து ஓராண்டாகியும் செயல்படாத மாணவிகள் விடுதி.

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் விடுதி, கல்லூரி அருகே கட்டப்பட்டுள்ள மாணவர்கள் விடுதி ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் ஒருவர் ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.

கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு இனாம் மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாநகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு இளங்கலை இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், புவி அமைப்பியல், ஆங்கிலம், வணிகவியல், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளும், முதுகலையில் கணிதம், தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளும் உள்ளன.

தமிழ் துறையில் முனைவர் பட்ட வகுப்பும் உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவிகளே அதிகம் படிக்கின்றனர். இது குறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக படிக்க விடுதி வசதி வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் கடந்த ஆட்சியின்போது, அமைச்சர் கடம்பூர் செ.ராஜு முயிற்சியால் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடதி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது விடுதியில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள் கூறும்போது, விடுதியை செயல்படுத்த தலா ஒரு சமையலர், காவலாளி, கணக்காளர், பராமப்பாளர் மற்றும் 2 உதவியாளர்கள் நியமிக்க வேண்டும். இவர்களுக்கு தொகுப்பூதியமாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் மாதம்தோறும் ரூ.60 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. மேலும், மின் கட்டணம், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்களுக்கும் ம் பணம் தேவை.

தற்போது கல்லூரியில் இருந்து 20 மாணவிகள் வரை மட்டுமே விடுதியில் சேர முன்வந்துள்ளனர். அவர்களும் மாதந்தோம் ரூ.2 ஆயிரம் வரை தான் கொடுக்க முடியும். முன் வைப்பு தொகை செலுத்த முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது. மேலும், 153 மாணவிகள் தங்கும் வசதியுள்ள விடுதியை வெறும் 20 மாணவிகளை கொண்டு நடத்த முடியாது.

அதனால், அரசு மாணவிகளின் நலன் கருதி இலவச விடுதியாக அறிவித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர முன் வர வேண்டும். இதனால் கிராமப்புற மாணவிகளின் கல்லூரி படிப்பு மேலும் எளிதாகும். மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவிகள் விடுதிக்கு செல்வதற்கு சாலை வசதியும் ஏ்ற்படுத்த வேண்டும், என்றனர்.

இதே போல், கல்லூரி அருகே பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர்கள் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதி விரைவில் திறக்கப்படும் என கூறப்படும் நிலையில் இங்கு மாணவர்கள் இலவசமாக தங்கி கொள்ளலாம் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x