Published : 31 Jul 2023 05:36 AM
Last Updated : 31 Jul 2023 05:36 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முடிவு வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு https://mcc.nic.in/என்ற இணையதளத்தில் ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. முதல்சுற்று கலந்தாய்வு முடிவுகள்இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டுள்ளது.

ஜிப்மரில் சேர்ந்த மாணவர்: நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரபஞ்சன், தமிழக அரசின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 6-வது இடத்தையும், மாநில அளவில் 2-வது இடத்தையும் பிடித்த சென்னையைச் சேர்ந்த என்.சூர்யா சித்தார்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தேர்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 9-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.வருண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், நீட் தேர்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் கவுஸ்தவ் பவுரி, நீட் தேர்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-வது இடத்தைப் பிடித்த தமிழக மாணவர் சாமுவேல் ஹர்ஷித், நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-வது இடத்தைப் பிடித்த தமிழகமாணவர் ஜேக்கப் பிவின் ஆகியோர் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த 3 பேரில் சாமுவேல் ஹர்ஷித், மாநில அரசின் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்துக்கு விண்ணப்பித்திருந்தார். மற்ற இரண்டு மாணவர்கள் மாநில அரசு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x