

சென்னை: மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க பிரத்யேக குழுக்கள் அமைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கு என்எம்சி செயலர் ஸ்ரீநிதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கான சட்ட விதிகளின்படி அனைத்து இடங்களிலும் குறைதீர்ப்பு மற்றும் புகார் குழுக்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பணியிட புகார் குழு,துணைநிலை குழுக்கள், உள் குழுக்களை அமைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளவர்களின் கைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அதன்மூலம் புகார்களை பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் குற்றத் தடுப்புசட்ட விதிகளின்படி அக்குழு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.