குப்பை வாகன பயணத்துக்கு ‘குட்பை’ - ஓசூரில் தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

சின்ன எலசகிரி  மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ஆட்டோவில் புறப்பட தயாராகும் ஓசூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் சிறார்கள்.
சின்ன எலசகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ஆட்டோவில் புறப்பட தயாராகும் ஓசூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் சிறார்கள்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் தூய்மைப் பணியாளர்களின் சிறார்கள் குப்பை வாகனத்தில் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்து ஆட்டோவில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் ஓசூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் 24 பேர் சின்ன எலசகிரியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் இருப்பிடத்தி லிருந்து பள்ளி 1 கிமீ தூரத்தில் உள்ளது.

இதனால், சாலையை கடந்து பள்ளிக்குச் செல்வதில் சிறுவர்களுக்குச் சிரமம் இருப்பதால், குப்பை வாகனத்தில் தினசரி பள்ளிக்குச் சென்று வந்தனர். இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சிறுவர்களைப் பாதுகாப்பான வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்க மாநகராட்சி ஆணையர் சினேகா உத்தரவிட்டார்.

தொடர்ந்து , தூய்மை பணியாளர்களை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தனது சொந்த செலவில் சிறுவர்களைத் தினசரி ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால், குப்பை நாற்றத்துக்கு இடையில் பள்ளிக்குச் சென்று வந்த சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in