Published : 08 Jul 2023 07:03 AM
Last Updated : 08 Jul 2023 07:03 AM

மைக்ரோசாஃப்ட் நிறுவன உதவியுடன் கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி: பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஸ்டெம் அடிப்படையிலான, அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக வானவில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை அதிகரிக்க, 710 கருத்தாளர்களின் உதவியுடன் செயல்முறைப் பயிற்சிகள் உள்ளிட்டவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கிராம மாணவர்களுக்கு ரோபோட்டிக், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதற்காக ‘டீல்ஸ்’ என்ற திட்டத்தை செயல்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவன அலுவலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக கல்வி மேம்பாட்டுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழகம் இணைந்துள்ளது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் அன்பில்மகேஸ் கூறும்போது, ‘‘இந்த திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 13 பள்ளிகளைச் சேர்ந்த 3,800 மாணவர்கள் இந்த ‘டீல்ஸ்’ திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

இந்த திட்டத்துக்கான தொடக்கவிழாவை நடத்துவது குறித்து சென்னை திரும்பியதும், முதல்வருடன் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும். அதில் மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திட்டம் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெறும்’’ என்றார்.

இந்நிலையில், ‘டீல்ஸ்’ திட்ட ஒப்பந்தம் தமிழகத்துக்கு கிடைத்தமைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத் தரம்மிக்க தொழில்நுட்பப் பயிற்சி வழங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள உள்ள பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் அமெரிக்காவில் இருந்து தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை, உலகத் தரத்துக்கு உயர்த்துவதே திமுக அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x