Published : 27 Jun 2023 04:09 AM
Last Updated : 27 Jun 2023 04:09 AM

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - 102 பேர் 200-க்கு 200 கட் ஆஃப்

200-க்கு 200 கட்ஆஃப் பெற்ற தருமபுரி மாவட்ட அரசு பள்ளி மாணவி மகாலட்சுமி.

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர்கள் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கிடையே, மருத்துவக் கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படாததால், ஜூலை 2-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் கலந்தாய்வு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வை பொருத்து, பொறியியல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம்
இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடந்தது. பொறியியல் கல்லூரிகளில் சேர 2.29 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.

ரேண்டம் எண் வெளியீடு: இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியானது. தொடர்ந்து, ஜூன் 20-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், தகுதியானவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார்.

இதில் 1,06,384 மாணவர்கள், 72,558 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேர் என 1,78,959 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றனர். தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

பொது பிரிவுக்கான தரவரிசை: பொது பிரிவுக்கான தரவரிசையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மாணவி நேத்ரா, தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ஹரிணிகா, திருச்சி மாவட்டம் மேலவாடியை சேர்ந்த ரோஷினி பானு ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் 3 பேரும் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 31,445 பேர் விண்ணப்பித்த நிலையில், 28,425 பேர் தகுதி பெற்றனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 5,842 (25.86%) அதிகரித்துள்ளது. அவர்களுக்கான தரவரிசை பட்டியலில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி (200-க்கு 200 கட்ஆஃப்), நாகை மாவட்டத்தை சேர்ந்த நிவேதிதா (199.5), கோவையை சேர்ந்த சரவணகுமார் (199) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

ஜூன் 30 வரை அவகாசம்: தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்பு மையங்களுக்கு சென்று மாணவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யலாம். மேலும், சந்தேகங்களுக்கு 18004250110 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 18,767 பேர் (11.09%) கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அதில், 1,78,959 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு விளையாட்டு பிரிவின் கீழ் 5,024 பேர் விண்ணப்பித்தனர். அவர்களது விளையாட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 2,203 பேருக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,198 பேர், மாற்றுத் திறன் மாணவர்கள் 351 பேருக்கும் தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதில் 100 பேர் தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள். இவர்களில் 32 பேர் மருத்துவப் படிப்புகளில் சேரவும் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏஐசிடிஇ விதிமுறைகள் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். கணித பாடத்தை கட்டாயம் படித்திருந்தால்தான் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர முடியும்.

இருமொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. மாநில கல்விக் கொள்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து விசாரிக்க உயர்கல்வி துறையில் இருந்து குழு அமைக்கப்படும். இந்த குழு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு முடிவுகள் வந்தபோதிலும், மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படாமல் உள்ளது.

விரைவில் தேதி அறிவிப்பு: இந்நிலையில், ஜூலை 2-வது வாரம் மருத்துவ கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அது முடிந்த பிறகு, பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். இதனால், ஜூலை 2-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொறியியல் கலந்தாய்வு சற்று தாமதம் ஆகலாம். மருத்துவக் கலந்தாய்வை பொருத்து, பொறியியல் கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி துறை செயலர் கார்த் திகேயன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x