Published : 24 Jun 2023 07:22 AM
Last Updated : 24 Jun 2023 07:22 AM

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி பர்கூர் பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: பர்கூர் அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் பெற்றோர், அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூரில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை 380 மாணவர்கள் படிக்கும் நிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கு தலா ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர்.

‘இப்பள்ளியில் 10 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 5 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி, நிரப்ப வேண்டும். பள்ளி கட்டிடத்தை, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும்’ என வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாணவர்கள், பெற்றோர் மற்றும் அனைத்துக் கட்சியினர் திரண்ட நிலையில், ‘போராட்டத்துக்கு அனுமதி இல்லை’ என போலீஸார் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, பர்கூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், மாணிக்கம் (திமுக), ஆர்.முருகன் (அதிமுக), பி.முருகன் (தேமுதிக), சுடர் அமைப்பின் இயக்குநர் நடராஜ், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில தலைவர் தினேஷ் சீரங்கராஜ் மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, பர்கூரில் நேற்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர், தங்களது பெற்றோருடன் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x