

சென்னை: சரோஜினி தாமோதரன் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக சரோஜினி தாமோதரன் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சரோஜினி தாமோதரன் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையை பெற விரும்பும் மாணவர்கள் 2023-ம் ஆண்டு பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தகுதி வாய்ந்த மாணவர்கள் www.vidyadhan.org என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் முறையில் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழக மாணவர்கள் vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சலையும், புதுச்சேரி மாணவர்கள் vidyadhan.puducherry@sdfoundationindia.com என்ற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். 9663517131 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.