

பிரதிநிதித்துவப் படம்
கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே எண் கொண்ட இரண்டு இரு சக்கர வாகனங்களை இளைஞர்கள் பயன்படுத்தியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
மாநகர காவல் ஆணையர் என்.கண்ணன் உத்தரவின் பேரில், மேற்குப்பிரிவு போக்குவரத்து போலீஸார் விசாரித்தனர். அதில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிபி(24), அஸ்வின்(18) ஆகியோர் ஒரே எண் கொண்ட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தியது தெரியவந்தது.
சிபி சொந்தமாக கார் சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அஸ்வின் ஐ.டி.ஐ மாணவர். இதுதொடர்பாக மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மகேஸ்வரன் கூறும்போது,‘‘போக்குவரத்து போலீஸார், ஆர்டிஓ விசாரித்ததில், டிஎன் 21 சி 2697 என்ற எண் சிவப்பு வண்ண யமஹா வாகனத்துக்கு உரியது ஆகும். இந்த வாகன உரிமையாளர் காஞ்சீபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என ஆவணத்தில் உள்ளது.
வாகனத்தை வாங்கியபோது பெயர் மாற்றப்படவில்லை. இந்த வாகனத்தை சிபி பயன்படுத்தியுள்ளார். அவர் தலைக்கவசம் அணியாதது, காப்பீடு காலாவதியானதற்காக ரூ.1,700 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதே எண்ணுடன் இருந்த மற்றொரு வாகனத்தின் அசல் எண் டிஎன் 20 சி 5751 ஆகும். ஆனால், இந்த எண்ணை அஸ்வின் பயன்படுத்தாமல், சிபியின் வாகன எண்ணை பயன்படுத்தியுள்ளார்.
இந்த வாகனத்தின் உரிமையாளர் மணப்பாறையை சேர்ந்த நல்லமணிவேல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வாங்கிய போதும் பெயர் மாற்றப் படாமல் உள்ளது.
தலைக்கவசம் அணியாதது, மற்றொரு வாகன எண்ணை பயன்படுத்தியது, காப்பீடு இல்லாதது உள்ளிட்ட பல்வேறு மோட்டார் வாகனச் சட்ட விதி மீறல்களுக்கு ஏற்ப அஸ்வினுக்கு மொத்தம் ரூ.7,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.