

சென்னை: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை, மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக் காதலால் நிகழ்ந்த இந்த விபரீதம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். கடந்த 3 மாதங்களாக இளைஞர் ஒருவர் மாணவியை பின் தொடர்ந்து காதலித்துள்ளார். ஆனால் மாணவியோ அந்த காதலை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுங்கிச் சென்றுள்ளார்.
இருப்பினும் இளைஞர் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும்போதும், கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போதும் பின் தொடர்ந்து காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி தொல்லை கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தந்தை, சம்பந்தப்பட்ட இளைஞரை கண்டித்துள்ளார்.
ஆனாலும், அந்த இளைஞர் கேட்காமல் தொடர்ந்த மாணவியை பின் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி வீட்டு மொட்டை மாடியில் காய வைத்திருந்திருந்த துணிகளை எடுக்க சென்றுள்ளார். மாணவியின் வீட்டருகே நின்று அவரை நோட்டமிட்ட இளைஞர், உடனே பக்கத்து வீட்டின் வழியாக மாணவி வீட்டின் மாடிக்கு தாவி குதித்துள்ளார்.
பின்னர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் மாணவியை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளார். மாடியிலிருந்து கீழே விழுந்ததில் மாணவியின் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு கதறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் சேர்ந்து மாணவியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, மாணவியை கீழே தள்ளிவிட்டு தப்ப முயன்ற இளைஞரை அக்கம் பக்கத்தினர் பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸாரின் விசாரணையில் பிடிபட்ட இளைஞர் அரியலூர், மேலத் தெருவைச் சேர்ந்த சிலம்பரசன் (27) என்பதும், இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாணவியின் எதிர் வீட்டில் தங்கியிருந்து கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வேலை செய்து வந்ததும், தற்போது மாணவி வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்ததை அறிந்து அங்கு சென்று, மதுபோதையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.