

பூந்தமல்லி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வந்த 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் குட்கா கடத்திச் செல்லப்படுவதாக நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நசரத்பேட்டை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வாகனங்களை சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வாகனங்களை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (35), சென்னை போரூரைச் சேர்ந்த முத்து ராஜ் (24), தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ராமச் சந்திரன் (25) ஆகிய 3 பேரை நசரத் பேட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
2,882 கிலோ பறிமுதல்: மேலும் அவர்களிடம் இருந்து 2,882 கிலோ குட்கா, 2 சுரக்கு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணை யில் அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
போலீஸாரின் விசாரணைக்கு பிறகு 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.