

மணிகண்டன்
சேலம் / சென்னை: சேலத்தில் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தவெக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ்வில் சிக்கிய வீடியோக்களின் அடிப்படையில் கொண்டலாம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த இளம் பெண் சமூக வலை தளங்களில் கண்ணீர் மல்க பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அதில், சேலம் நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன் 50-க்கும் மேற்பட்டபெண்களை ஆபாசமாக வீடியோஎடுத்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி, கொண்டலாம்பட்டி போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், காவல் உதவி ஆணையர் முரளி,காவல் ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீஸார் தவெக பிரமுகர் மணிகண்டனைபிடித்து விசாரணை நடத்தினர்.
அவரின் செல்போன் மற்றும் பென் டிரைவ் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்ததில், மணிகண்டன் 3 பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது. வீடியோ காட்சியில் பதிவாகியிருந்த 32 வயது பெண் ஒருவர் நேரடியாக கொண்டலாம்பட்டிகாவல் நிலையத்துக்கு வந்து மணிகண்டன் மீது புகார் கொடுத்தார்.
பெண்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய மணிகண்டனை கொண்டலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண்ணின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்துவது, பாலியல் தொந்தரவு கொடுத்தது, கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்தது என 8 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பாலியல் வழக்கில் சிக்கி கைதாகியுள்ள மணிகண்டன் தவெகவில் இருந்து செயல்பட்டு வந்த நிலையில், அவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தவெகவுக்கும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சேலம் நெய்க்காரப்பட்டி சின்னபுத்தூரைச் சேர்ந்த எம்.மணிகண்டனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: பெண்களை இப்படி வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பாவிக்கும் மனித மிருகங்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் விஜய், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார். பெண்களைக் காக்க சிங்கப்பெண் சிறப்புப் படை அமைத்துள்ளதாக விளம்பரம் தேடும் முதல்வர், தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன படை அமைக்கப் போகிறார்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.: பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயன்றதைப் போல, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டகுற்றவாளிகளைக் காப்பாற்ற முயலாமல், உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பையும் உரிய நீதியும் கிடைக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: மணிகண்டன் பெண்களை மிரட்டி பாலியல் வணிகத்தில் தள்ளியுள்ளதால் இதன் பின்புலமாக மேலும் பலர் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர்டிடிவி தினகரன்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என சூளுரைத்த முதல்வர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளுக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களின் கண்ணியம் குறித்தும் அறிவுரை வழங்கத் தவறியது ஏன்?