

இணை ஆணையர் ஜோதிலட்சுமி (வலது) மற்றும் தோழி கிரிஜா.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோயில் திருப்பணி மேற்கொண்டதற்கான தொகையை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தீபாம்பாள்புரம் கிராமத்தில் பழமையான வன்மீகநாதர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நாகையைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இப்பணிக்கான பில் தொகையை வழங்கும்படி, தஞ்சாவூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம்(47) மதியழகன் கேட்டுள்ளார். அதற்கு ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். பின்னர், போலீஸாரின் ஆலோசனையின்படி, தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இருந்த ஜோதிலட்சுமியின் தோழியான கிரிஜாவிடம்(51) ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை நேற்று மாலை மதியழகன் கொடுத்துள்ளார். அவர் அந்தப் பணத்தை வாங்கி ஜோதிலட்சுமியிடம் அளித்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அன்பரசன், ஆய்வாளர்கள் பத்மாவதி, அருண் உள்ளிட்டோர் ஜோதிலட்சுமி, கிரிஜா ஆகியோரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் உள்ள ஜோதிலட்சுமியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இணை ஆணையர் ஜோதிலட்சுமியும், கிரிஜாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பி்டத்தக்கது.