

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டரின் மனைவியின் வாட்ஸ்அப் கணக்கை ஒரு கும்பல் ஹேக் செய்து ரூ.1 லட்சம் வரை பணம்பெற்று மோசடி செய்துள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகரான சுந்தர் பட்டரின் மனைவியின் வாட்ஸ்அப் கணக்கை அடையாளம் தெரியாத சைபர் மோசடி கும்பல் ‘ஹேக்’ செய்து அவரது வாட்ஸ்அப் கணக்கு மூலம் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு அவசர தேவைக்கு பணம் தேவை என கேட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சிலர் சுந்தர் பட்டரை தொடர்பு கொண்டு கேட்டபோதுதான், இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, திருச்சி சைபர் கிரைம் போலீஸில் சுந்தர் பட்டர் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சுந்தர் பட்டர் கூறியது: எனது மனைவியின் வாட்ஸ்அப் கணக்கில் இருந்து பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்ததால், பலரும் என்னை தொடர்பு கொண்டு எவ்வளவு பணம் வேண்டும் என விசாரித்தனர். அப்போதுதான் ஏதோ மோசடி நடைபெறுவதை உணர்ந்து, நாங்கள் யாரிடமும் பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பவில்லை. யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என ஒவ்வொருவரையும் அழைத்துத் தெரிவித்தேன். ஆனால், அதற்குள் 3 பேரிடம் ரூ.1 லட்சத்தை அந்த மோசடி கும்பல் வங்கிக் கணக்கு மூலம் பெற்றுவிட்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன் என்றார்.