

விபத்தில் உயிரிழந்த மோகனசுந்தரம் (35), பொன்னழகு (59).
சிவகங்கை: சிவகங்கை அருகே தனியார் சர்க்கரை ஆலையில் சுத்தம் செய்தபோது, கரும்புப் பாகு தொட்டியில் தவறிவிழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகங்கை அருகே படமாத்தூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சமீபத்தில் அரவை பணி தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.14) பராமரிப்பு பணிக்காக, கரும்புப் பாகு சேகரிப்பு தொட்டியை கரும்பாவூரைச் சேர்ந்த மோகனசுந்தரம் (35), சிவகங்கை மதுரைச் சாலையை சேர்ந்த பொன்னழகு (59) ஆகியோர் சுத்தம் செய்தனர்.
அப்போது, இருவரும் தொட்டிக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.