

கிருஷ்ணகிரி: இரிடியம் விற்பனை என்ற பெயரில் ரூ.5.65 கோடி மோசடி செய்த 6 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு, போச்சம்பள்ளி நண்பர் மூலம் அறிமுகமான ஒரு கும்பல், இரிடியம் விற்பனை மூலம் பல கோடி ரூபாய் கிடைத்ததாகவும், அந்தப் பணம் இந்திய ரிசர்வ் வங்கியில் முடங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அந்தப் பணத்தை விடுவிக்க ஆர்பிஐ-க்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு பணம் கொடுத்தால், இரட்டிப்பாக திரும்ப வழங்குகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை உண்மை என நம்பிய திருமூர்த்தி, முதல்கட்டமாக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். தொடர்ந்து, திருமூர்த்தியை டெல்லிக்கு அழைத்த கும்பல், ஆர்பிஐ அதிகாரிகள் என்று சிலரை அறிமுகப்படுத்தி, மேலும் ரூ.50 லட்சத்தை திருமூர்த்தியிடம் பெற்றுள்ளது.
பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திருமூர்த்தி, சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரி சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார். டிஎஸ்பி வினோத் தலைமையில், ஆய்வாளர்கள் குமார், சந்தோஷ், கோமதி, சத்திய சுதா, ஜெயக்குமார், கேசவன் மற்றும் போலீஸார் கொண்ட 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
விசாரணையில், அந்த கும்பல் பிஹார், ஜார்க்கண்ட், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 23 பேரிடம், ரூ.5.65 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரு சீனிவாசன் (43), தெலங்கானா ஜார்ஜ் தாமஸ் (53), ஜார்க்கண்ட் குல்ஷன் தராத் (41), பாட்னா சோனு குமார் துபே (34), கோபால் சேகர் (38), ஆஷிஷ் குமார் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மடிக்கணினிகள், 8 செல்போன்கள், போலி அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.