

வேலூர்: வேலூர் அருகே தனிப்பிரிவு காவலரின் மனைவி கழுத்தில் இருந்து தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் தட்சிணாமூர்த்தி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி அமுதா மற்றும் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து பள்ளிகொண்டா நோக் கிச்சென்றார்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது பொய்கை அருகே பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.
தங்கச்சங்கிலியை பறித்த போது தனிப்பிரிவு காவலர் தட்சிணாமூர்த்தி, அமுதா மற்றும் அவர்களது மகள் என 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், அமுதாவுக்கு கால் எலும்பு முறிந்தது. மகளுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறித்துச்சென்ற மர்ம நபர்கள் யாரென்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.