

சென்னை: மடிப்பாக்கம், ராம்நகர் வடக்கு, 3-வது தெருவைச் சேர்ந்தவர் அபர்ணா (43). இவருக்கு முகநூல் மூலம் கடந்தாண்டு திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த ராம் கமல் (33) என்பவர் அறிமுகமானார்.
இவர் தனக்கு அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகளையும் நன்கு தெரியும் என்றும், தான் நினைத்தால் மருத்துவக் கல்லூரிகளில் சீட் மற்றும் அரசு வேலைகளை கூட வாங்கித் தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை உண்மையென நம்பிய அபர்ணா தனது மகனுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கமிஷனாக ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட ராம் கமல், உறுதியளித்தபடி சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. பெற்ற பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து அபர்ணா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து ராம் கமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில், ராம் கமல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், இவர் மீது ஏற்கெனவே இதே போன்றதொரு வழக்கு மதுரை மாவட்டம், அண்ணாநகர் காவல் நிலையத்தில் உள்ளதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.