

ஷேக் முத்தலீப்
சென்னை: டி.வி நடிகைக்கு மயக்க குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, தனியார் நிறுவன உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார். கணவரை பிரிந்த அவருக்கு கடந்தாண்டு ஷேக் முத்தலீப் (46) என்பவர் அறிமுகமானார்.
மேற்கு வேளச்சேரியைச் சேர்ந்த அவர், தனியார் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் கூறி உங்களுக்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் பெற்றுத் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறி நடிகையுடன் நெருக்கமாகி உள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் முத்தலீப், தனது நண்பருடன் சேர்ந்து, சினிமா வாய்ப்பு மற்றும் விருது தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி நடிகையை, மதுராந்தகம் அருகே உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி ரூ.2 லட்சம் ரொக்கம், 11 பவுன் தங்க நகைகளை முத்தலீப், அவரது நண்பர் பறித்துள்ளனர்.
மிரட்டல் அதிகரித்ததால் சம்பந்தப்பட்ட நடிகை, இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து, முத்தலீப்பை கைது செய்தனர். அவரது நண்பரை தேடி வருகின்றனர்.