

இடது: ரவுடி பாலமுருகன் | வலது: தென்காசி போலீஸார்
தென்காசி: ரவுடியை பிடிக்க மலையில் ஏறிய 5 போலீஸார் கீழே இறங்க முடியாமல் இரவு முழுவதும் தவித்தனர். பின்னர், கடையம் அருகே 10 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், கடையம், கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் மீது திருநெல்வேலி, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை போலீஸார் அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து, பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின்பேரில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படை போலீஸார் நேற்று மாலையில் அந்த மலைப் பகுதிக்குச் சென்று பாலமுருகனை தேடினர்.
அவ்வப்போது மழை பெய்ததால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் இரவு நேரத்திலும் சக்தி வாய்ந்த விளக்குகள் வெளிச்சத்துடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய 5 போலீஸார் மீண்டும் இறங்க முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பார் எஸ்.அரவிந்த் சம்பவ இடத்துக்கு சென்று, காவலர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் பணிகளை ஆய்வு செய்தார். ஆலங்குளம் மற்றும் தென்காசியில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இன்று அதிகாலையில் 5 போலீஸாரும் மீட்கப்பட்டனர்.
மலைப் பகுதியில் பதுங்கியுள்ள பாலமுருகளை பிடிக்க 50-க்கும் மேற்பட்ட போலீஸார் இரண்டாவது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் உதவியுடன் பாலமுருகன் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.